ஊருக்குள் செல்லாத பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பு.!

Feb 20, 2025 - 11:20
Feb 20, 2025 - 11:23
 0
ஊருக்குள் செல்லாத பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பு.!

ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாத அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு ரூபாய் 60,000 அபராதம். இரவில் சோதனையில் ஈடுபட ஆட்சியர் பேருந்து நடத்துனர், ஓட்டுனரிடம் சரமாரி கேள்வி..!

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர், உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம், ஏரல், முக்காணி, ஆத்தூர், காயல்பட்டினம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு தினம்தோறும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் என 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் இருந்து வரும் பேருந்துகள் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் பயணிகளை வெளியே உள்ள புதுக்குடி மெயின் ரோட்டில் இறக்கிவிட்டு செல்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரை அடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் அனைத்து பேருந்துகளும் செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஆனாலும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேர் வழியாக சென்றது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தின் எல்லை பகுதியான செய்துங்கநல்லூர் சோதனை சாவடியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் நேற்று இரவு அதிரடி ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் மெயின் ரோட்டில் வந்த அனைத்து பேருந்துகளுக்கும் தலா 10,000 ரூபாய் வீதம் மொத்தம் 6 பேருந்துகளுக்கும் 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார்.

சில அரசு பேருந்து ஓட்டுநர்கள் தாங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வழிகளில் மட்டுமே நின்று செல்வதாக கூறினர். ஆனால் பேருந்துகள் செல்ல அனுமதி கொடுப்பதே நாங்கள் தான். நாங்கள் எந்த பேருந்தையும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லவேண்டாம் என்று கூறவில்லையே என்று ஆட்சியர் கூறினார்.

நீங்கள் தவறு செய்ததற்கு அபராதம் விதிப்போம் என்று ஆட்சியர் கூற அதற்கு நாங்கள் எந்த தவறு செய்யவில்லை. எங்கள் நிர்வாகம் கூறிய வழிமுறைகளைத்தான் பின்பற்றுகிறோம் என்று ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர்.

இருந்தும் அபராதம் விதிக்கப்பட்ட அனைத்து பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களிடம் நீங்கள் அனைவரும் பொதுமக்களுக்காக தானே பேருந்து ஓட்டுகிறீர்கள். அரசு போக்குவரத்து கழகமும் அதற்கு தானே இயங்குகிறது. ஆனால் நீங்கள் பொதுமக்களை ஊருக்குள் சென்று ஏற்றாமல் இடையில் இறக்கி விட்டால் என்ன அர்த்தம் என்றார். மேலும் சில ஓட்டுனர்களை பார்த்து நீங்கள் பேருந்தை மக்களுக்காக பேருந்து ஓட்டவில்லை. ரேஸ்க்காக பேருந்து ஓட்டுகிறீர்களா என்று கேட்டார். அதற்கு பதில் அளிக்க முடியாமல் ஓட்டுனர்களும் நடத்துனரும் திணறினர். சில பேருந்துகளை பார்த்த ஆட்சியர் திருநெல்வேலி, திருச்செந்தூர் இடையே பைபாஸ் சாலையே இல்லை. பின் எப்படி பைபாஸ் ரைடர் என பெயரிடப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து இதுபோல் மீண்டும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு தொடர்ந்து அபராதம் விதிக்க வேண்டும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow