தூத்துக்குடி திமுக கவுன்சிலர் கைது.. பிண்ணனி என்ன..!

இந்தோனேசியா நாட்டிலிருந்து கொட்டைப்பாக்குகள் இறக்குமதி செய்தது தொடர்பாக தூத்துக்குடி மாநகராட்சி திமுக கவுன்சிலர் கைது..!
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கொட்டைப்பாக்குகள் இறக்குமதி செய்ய மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யக் கூடாது என தடையும், சில நாடுகளில் இருந்து 100 சதவீதம் வரி செலுத்தி இறக்குமதி செய்து கொள்ளலாம் என கட்டுப்பாடுகளையும் அரசு விதித்து உத்தரவிட்டுள்ளது.
இருந்தபோதிலும், சிலர் அதையும் மீறி வேறு ஏதேனும் பொருட்கள் பெயரில் துறைமுகங்கள் வழியாக கொட்டை பாக்குகளை இறக்குமதி செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் இந்தோனேஷியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்த ஒரு கப்பலில் முந்திரி பருப்பு இறக்குமதி செய்யப்படுவதாக ஆவணங்கள் இருந்தன.
சந்தேகமடைந்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதில் இருந்த சில கன்டெய்னர் பெட்டிகளை சோதனை செய்தனர். அதில், சுமார் 23 டன் கொட்டை பாக்குகள்
மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்து. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவற்றின் மதிப்பு சுமார் 2 கோடி வரை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொட்டை பாக்கு இறக்குமதி தொடர்பாக தனியார் நிறுவன ஊழியர்கள் 4 பேரை பிடித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், தூத்துக்குடி மாநகராட்சி 18 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சீனிவாசன் என்ற ஜான் (43), என்பவரை இன்று கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி மருத்துவப் பரிசோதனைக்குப் பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
What's Your Reaction?






