பள்ளி மாணவி சொன்ன பதிலை கேட்டு அதிர்ச்சி அடைந்த மத்திய அமைச்சர்.!
எனக்கு நடிகர் விஜய் தான் பிடிக்கும் என்று பள்ளி மாணவி சொன்ன பதிலை கேட்ட மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால் திகைத்துப் போனார்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் மத்திய அரசின் துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் இன்று பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், தூத்துக்குடி துறைமுகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஹெரிடேஜ் மியூசியத்தை திறந்து வைத்த அவர், பள்ளி மாணவிகளுடன் அருங்காட்சியத்தை பார்வையிட்டார்.
தொடர்ந்து மாணவிகளுடன் உரையாடிய அமைச்சர் சர்பானந்தா சோனாவால், அவர்களது பெயர் என்னவென்று கேட்டு தெரிந்து கொண்டார். பின்னர், உங்களுக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டா? என்று கேட்டபோது, தாங்கள் கைப்பந்து, கோ-கோ ஆகிய விளையாட்டுகளில் விளையாடுவதாகவும், மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதாகவும் மாணவிகள் தெரிவித்தனர்.
மேலும், உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? என்ற கேள்விக்கு, அங்கிருந்த பள்ளி மாணவி ஒருவர் வேகமாக நடிகர் விஜய் என்று கூறியதால், அந்த பதிலைக் கேட்ட அமைச்சர் திகைத்து போனார். உடனே, ஏன் ரஜினிகாந்த், கமலஹாசன் எல்லாம் பிடிக்காதா? என கேட்டார். இதனால், அங்கு சிறிது நேரம் சிரிப்பலை நிலவியது. பின்னர், மாணவிகளை தமிழில் பிடித்த பாடலை பாட சொன்னார். அப்போது, ரஜினிகாந்த் நடித்த 'தளபதி' திரைப்படத்திலிருந்து 'யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே' என்ற பாடலை மாணவிகள் பாடினர். அதனை ரசித்து கேட்ட அமைச்சர் சர்பானந்தா சோனாவால், மாணவிகளை பாராட்டினார்.
செய்தியாளர் மு.மணிகண்டன்
செய்தியாளர் மு.மணிகண்டன்