குடும்பத்தை இழிவுபடுத்தும் பேச்சு தேவையா? – நயினார் நாகேந்திரனுக்கு தவெக இளைஞர் அணி நிர்வாகி அபிஷேக் பொன்சீலன் கடும் கண்டனம்!
தமிழகம்: இன்று (15.08.2026) சென்னையில் மாநில பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற விழாவில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும் போது.., "சட்டப்பேரவையில் 'அப்பா எங்கே, அப்பா எங்கே' என்று தேடினால் எப்படி தெரியும்? வீட்டுக்குச் சென்று அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார்? என்று சொல்வார்கள். சட்டப்பேரவையில் அப்பாவைத் தேடினால் யாருக்கு தெரியும்?" என்று பேசியுள்ளார்.
இதற்கு அமைச்சர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.. இந்த நிலையில், அரசியல் விமர்சனம் என்பது தனிப்பட்ட குடும்பத்தை இழிவுபடுத்தும் அளவுக்கு செல்லக்கூடாது. அத்தகைய பேச்சுகள் அரசியல் நாகரிகத்தின் எல்லையை மீறும் செயல் என தமிழக வெற்றி கழக தூத்துக்குடி மாநகர் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகி அபிஷேக் பொன்சீலன் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கடும் கண்டத்தை பதிவு செய்திருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அரசியல் ரீதியாக தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு இருந்தால், அதற்கு அரசியல் ரீதியாக பதில் அளிப்பது தான் ஜனநாயக நடைமுறை. அதைவிடுத்து, “அப்பா யார் என்று வீட்டுக்குச் சென்று அம்மாவிடம் கேட்டால்தான் தெரியும்” என்ற வகையில் குடும்பத்தை தொடர்புபடுத்தி பேசுவது எந்த வகையான அரசியல் நாகரிகம்?
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஒரு மூத்த அரசியல் தலைவர். பொதுவெளியில் தான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவர் நன்கு அறிந்திருப்பார். அப்படியிருக்க, அரசியல் விவாதத்தை தனிப்பட்ட குடும்பத்தை நோக்கி கொண்டு செல்ல வேண்டிய அவசியம் என்ன?
ஒருவர் அரசியலில் தவறு செய்திருந்தால், அந்த தவறை விமர்சிக்கலாம். ஆட்சியில் குறைகள் இருந்தால் அவற்றை சுட்டிக்காட்டலாம். கொள்கையில் முரண்பாடு இருந்தால் கேள்வி எழுப்பலாம். அதுதான் ஆரோக்கியமான ஜனநாயக அரசியல்.
“எங்கே அப்பாவைக் காணோம்?” என்று முதல்வர் விஜய் பேசியிருந்தால், அதற்கு அரசியல் ரீதியாக பதில் அளிக்க பல வழிகள் உள்ளன. ஆனால் அதற்கு பதிலாக குடும்பத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது பதிலடி அரசியல் அல்ல அது அரசியல் விவாதத்தின் தரத்தை குறைக்கும் செயல்.
அரசியலில் கருத்து மோதல்கள் இருக்கலாம். கொள்கை ரீதியாக கடுமையான விமர்சனங்களும் இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட குடும்பத்தை குறிவைத்து பேசுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நாளை இதே வார்த்தைகளை நயினார் நாகேந்திரனின் குடும்பத்தை நோக்கி வேறு ஒரு அரசியல்வாதி பயன்படுத்தினால், அதை அவர் அரசியல் விமர்சனம் என்று ஏற்றுக்கொள்வாரா?
திமுகவைப் பற்றி பேசினால் நயினார் நாகேந்திரனுக்கு என்னவாம்? எங்கள் அமைச்சர்கள் ஏற்கனவே கூறியதுபோல், திமுக–பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டதா? அந்த அன்பின் வெளிப்பாடாகத்தான் நயினார் நாகேந்திரன் திமுகவை விமர்சிக்காமல், வேறு விஷயங்களைப் பற்றி பேசுகிறாரா?”
அரசியலில் வார்த்தைகள் ஆயுதமாக இருக்கலாம். ஆனால் அந்த வார்த்தைகளை எங்கு, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதுதான் ஒரு அரசியல் தலைவரின் முதிர்ச்சியையும் நாகரிகத்தையும் வெளிப்படுத்துகிறது.
எனவே, அரசியல் விமர்சனத்தை அரசியல் ரீதியாகவே எதிர்கொள்ள வேண்டுமே தவிர தனிப்பட்ட குடும்பத்தை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுகளை தவிர்க்க வேண்டும். நயினார் நாகேந்திரன் தனது கருத்துக்கு விளக்கம் அளிப்பதுடன், தவறு இருந்தால் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
துப்பறிவாளன் மணி