இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக பத்திரிகை துறை இருந்து வருகிறது. இந்திய அரசியல் மட்டுமின்றி அரசு சார்ந்த திட்டங்களையும், அரசியல் கட்சிகளின் கொள்கைகளையும் தேர்தல் காலங்களில் 24 மணி நேரமும் முழுமையாக பணியாற்றி வெளி உலகத்திற்கு கொண்டு வரும் ஒப்பற்ற துறையாக பத்திரிகை துறை உள்ளது.
அதில் பணியாற்றும் பலர் சில சமயங்களில் குடும்பத்தையும் மறந்து உறவினர்களின் நிகழ்ச்சிகளையும், புறந்தள்ளிவிட்டு பணியாற்றி வரும் காலக்கட்டத்தில் தமிழகத்தில் பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டுமென்று தேசிய அளவில் உள்ள சங்கமும், மாநில அளவில் உள்ள சங்கமும் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
அதனை தொடர்ந்து, தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றப்பின் பத்திரிகையாளர்களுக்கென தனி நலவாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி அதில் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு பல்வேறு கட்ட ஆலோசனை கூட்டமும் நடைபெற்றன. பின்னர், நலவாரிய அறிவிப்புகளுக்கிணங்க முறையாக செயல்படும் வகையில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் என அனைவருக்கும் பத்திரிகை நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மூலம் முறையான ஆவணங்கள் பெறப்பட்டு, சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதை அனைவரும் பயன்பெறும் வகையில் சில தினங்களுக்கு முன்பு இத்திட்டத்தை சென்னையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பத்திரிகைத் துறையில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோருக்கான பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டையை செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் முத்துக்குமார் வழங்கினார். அதைப் பெற்றுக் கொண்டவர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தபடி அதை செயல்படுத்திய தமிழக அரசு நிர்வாகத்திற்க்கும் தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர், உதவி அலுவலர் உள்ளிட்டவர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்