தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் வெற்றிச்செல்வம் மகன் விக்னேஷ் (24), இவர் கடந்த 15.01.2023 அன்று தனது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக சென்னை சென்றுள்ளார். பின்னர் நேற்று (20.01.2023) திரும்பி வந்து பார்க்கும் போது அவரது வீட்டில் பீரோவில் இருந்த 2 சவரன் தங்க நகை மற்றும் ரூபாய் 25,000/- பணமும் திருடு போயுள்ளது.
இதுகுறித்து விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கோவில்பட்டி வள்ளுவர்நகர் பகுதியைச் சேர்ந்த தில்லை மகன் முத்துக்குமார் (24), என்பவர் விக்னேஷின் வீட்டிற்குள் புகுந்து தங்க நகை மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது.
உடனே கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் காந்தி முத்துக்குமாரை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 50,000/- மதிப்பிலான 2 சவரன் தங்க நகையையும் பறிமுதல் செய்தார்.