பணம் மாலை சர்ச்சை: தேர்தல் விதிமுறை மீறலா? – பரபரப்பு அதிகரிப்பு.!

பணம் மாலை சர்ச்சை: தேர்தல் விதிமுறை மீறலா? – பரபரப்பு அதிகரிப்பு.!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகாவில் உள்ள பண்டார விளை பகுதியில் நடைபெற்ற ஒரு அரசியல் நிகழ்வு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.. 

தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற வேட்பாளருமான சண்முகநாதனுக்கு, திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ராதாகிருஷ்ணன், 500 ரூபாய் நோட்டுகளால் கட்டப்பட்ட சுமார் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பண மாலையை அணிவித்ததாக தகவல்கள் வெளியாகிய நிலையில், இந்த நிகழ்வு அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக திமுக அமைப்பாளர் செல்வகுமார் சம்பவத்தின் புகைப்படங்களை இணைத்து தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வழியாக முறையான புகார் மனுவையும் அவர் தாக்கல் செய்துள்ளார்.

தேர்தல் காலத்தில், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்துச் செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு அமலில் இருக்கும் நிலையில், சுமார் 2 லட்ச ரூபாய் பணத்தை வெளிப்படையாக மாலையாக பயன்படுத்தியிருப்பது விதிமுறைகளை மீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பது குறித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்கள் கவனமாகக் காத்திருக்கின்றன.